குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0380 | அறம் | ஊழ் | ஊழ் Destiny |
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
ஊழிற் பெருவலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும்.
பரிமேலழகர் உரை
மற்றுஒன்று சூழினும் தான் முந்துறும்= தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலை ஆவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும்; ஊழிற் பெருவலி யா உள= அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை யுள?
விளக்கம்
பெருவலி ஆகுபெயர். சூழ்தல் பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றுச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்சவும்மை. எல்லாம் வழியாக வருதல் உடைமையின், ஊழே வலியது என்பதாம்.
இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.