குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0020 | அறம் | பாயிரம் | வான்சிறப்பு |
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு. பரிமேலழகர் உரை: (இதன்பொருள்) யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் = எவ்வகை மேம்பட்டார்க்கும் நீரையின்றி உலகியல் அமையாதாயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது = (அந்நீர் இடையறாது ஒழுகும்) ஒழுக்கும் வானையின்றி அமையாது. பரிமேலழகர் உரைவிளக்கம்: பொருள் இன்பங்களை ‘உலகியல்’ என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின். இடையறாது ஒழுகுதல், எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல். நீர்இன்றி அமையாது உலகு என்பது, எல்லாரானும் தெளியப்படுதலின், அதுபோல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படுமென்பார், 'நீரின்றமையாதுலகு எனின்' என்றார். இதனை, நீரையின்றி அமையாது உலகாயின், எத்திறத்தார்க்கும் மழையையின்றி ஒழுக்கம் நிரம்பாது என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது. தெய்வப்புலமை திருவள்ளுவர் செய்த அறத்துப்பால் அதிகாரம் 'வான்சிறப்பும்' அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் முற்றும். If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.