சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள்
பரிமேலழகர் உரை
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும்= யோகமாகிய சிறப்புத் தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள்= அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறியவாற்றான் மனம் தூயாரது துணிவு.
உரைவிளக்கம்
'உம்'மை பெறாமை மேற்று. சிறப்புடையதனைச் 'சிறப்'பென்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின், எட்டுச் சித்திகளையும் 'சிறப்பீனும் செல்வம்' என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசற்றார்' என்றும் கூறினார்.
இதனால் தமக்கொரு பயனோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.