குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0368 | அறம் | துறவறம் | அவாவறுத்தல் Giving up Desires |
அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
பரிமேலழகர் உரை
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும்= அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமுமில்லை; அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும்= ஒருவற்குப் பிற காரணங்கள் எல்லாம் இன்றி அஃதுஒன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும்.
விளக்கம்
உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்பே செய்துகொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவாற் செய்து கொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான் மூவகைத் துன்பங்களுமென்பது பெற்றாம்.
இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.