குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0228 | அறம் | இல்லறம் | ஈகை Charity |
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர். பரிமேலழகர் உரை தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர்= தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார்; ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்= வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து, அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ? பரிமேலழகர் உரைவிளக்கம் 'உவக்கும்' என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம். அஃது 'இன்பம்' என்னும் காரியப்பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவதல்லது வைத்து இழவார் என்பது கருத்து.