குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0223 | அறம் | இல்லறம் | ஈகை Charity |
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள. பரிமேலழகர் உரை இலன் என்னும் எவ்வம் உரையாமை= யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும்; ஈதல்= அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன் உடையான் கணணே= இவை இரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே. பரிமேலழகர் உரைவிளக்கம் மேல் 'தீது' என்றது ஒழிதற்கும், 'நன்று' என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி, 'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்' என்பதற்கு அவ்விளிவரவை ஒருவன் தனக்குச்சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப்பின்னும் பிறன்ஒருவன்பால் சென்று அவன் உரையாவகையால் கொடுத்தல் எனவும், "யான் இதுபொழுது பொருளுடையவன் அல்லேன்", எனக் கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாருமுளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.