குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0354 | அறம் | துறவறம் | மெய்யுணர்தல் Realization of Supreme Truth |
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு.
பரிமேலழகர் உரை
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே= செல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்தாய வழியும், அதனாற் பயன் இல்லையேயாம்; மெய்யுணர்வு இல்லாதவர்க்கு= மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு.
விளக்கம்
'ஐந்தாகிய உணர்வு' மனம். அஃது எய்துதலாவது மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்றவழியும் வீடு பயவாமையின் 'பயம்இன்று' என்றார். சிறப்பும்மை எய்துதற்கு அருமை விளக்கிநின்றது.
இவையிரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடுளது என மெய்யுணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.