Couplet-0337

குள் எண் Couplet Noபால்இயல்அதிகாரம் Chapter
0337அறம்துறவறம்நிலையாமை  Impermanance
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

பரிமேலழகர் உரை

ஒரு பொழுதும் வாழ்வது அறியார்= ஒருபொழுது அளவும் தம்முடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார்; கோடியும் அல்ல பல கருதுப= மாட்டாது வைத்தும், கோடியளவுமன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையாநிற்பர் அறிவிலாதார்.

உரைவிளக்கம்

இழிவுசிறப்பும்மையாற் 'பொழுது' என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று. பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும், அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்கி அப்பொருள் கடைக்கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமற் காக்குமாறும், அதனான் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும், தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் 'கருதுப' என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும்உளர்.