குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Praise of God |
0009 | அறம் | பாயிரம் | கடவுள் வாழ்த்து |
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. கோள் இல் பொறியின் குணம் இலவே எண் குணத்தான் தாளை வணங்காத் தலை. பரிமேலழகர் உரை: கோள் இல் பொறியின் குணம் இல = (தத்தமக்கு ஏற்ற புலன்களைக்) கொள்கையில்லாத பொறிகள் போலப் பயன் படுதலை உடையவல்ல; எண்குணத்தான் தாளை வணங்காத் தலை = எண்வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். பரிமேலழகர் உரைவிளக்கம்: எண்குணங்களாவன: தன்வயத்தனாதல், தூயவுடம்பினன்ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும்உணர்தல், இயல்பாகவே பாசங்களின்நீங்குதல், பேரருள்உடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பில் இன்பமுடைமை எனஇவை. இவ்வாறு சைவ ஆகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா'†வை முதலாக உடையன எனவும், 'கடையிலா அறிவை'‡ முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். ‘காணாத கண் முதலியனபோல, வணங்காத தலைகள் பயனில’வெனத் தலைமேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனில என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும், அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலுஞ் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.