புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பின்உள் துச்சில் இருந்த உயிர்க்கு
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பின்உள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
பரிமேலழகர் உரை
உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு= வாதமுதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு; புக்கில் அமைந்தின்று கொல்லோ= எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்தில்லைபோலும்!
உரைவிளக்கம்
அந்நோய்கள் இருக்கவமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும், ஓருடம்பினும் நிலைபெறாது வருதலால், 'துச்சில்இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின், பிறர் இல்களுள் ஒதுக்கிராது என்பதாம்; ஆகவே உயிரோடு கூடிநிற்பதோர் உடம்பும் இல்லையென்பது பெறப்பட்டது.
இவை ஏழுபாட்டானும், முறையே யாக்கைகட்கு வரைந்த நாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவை ஒரோவழிப் பிறந்தவளவிலே இறத்தலும், ஒருகணமாயினும் நிற்கும் என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கியவழிக் கிடக்குமாறும், அவற்றிற்குப் பிறப்பும் இறப்பும் மாறிமாறி வருமாறும், அவைதாம் உயிர்க்கு உரியஅன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.