குறள் எண் Couplet No | பால் | இயல் | அதிகாரம் Chapter |
0321 | அறம் | துறவறம் | கொல்லாமை Refrain from Killing |
அறவினை யாதுஎனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்
அறவினை யாது எனில் கொல்லாமை கோறல்
பிற வினை எல்லாம் தரும்
பரிமேலழகர் உரை
அறவினை யாது எனின் கொல்லாமை= அறங்கள் எல்லாமாகிய செய்கை யாதுஎன்று வினவின், அஃது ஓருயிரையும் கொல்லாமையாம்; கோறல் பிறவினை எல்லாம் தரும்= அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.
உரைவிளக்கம்
'அறம்' சாதியொருமை. விலக்கியதொழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை 'அறவினை' என்றார். ஈண்டுப் 'பிறவினை' என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம், ஏனைப் பாவங்கள் எல்லாம் கூடியும் விளைக்கமாட்டா என்பதாம். கொல்லாமைதானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்குஏது எதிர்மறை முகத்தாற் கூறியவாறாயிற்று.