பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்
பரிமேலழகர் உரை
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்= துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒருபகலது முற்கூற்றின்கட் செய்வாராயின்; தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்= தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.
உரைவிளக்கம்
'முற்பகல்' 'பிற்பகல்' என்பன பின்முன்னாகத்தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. தவம் அழிதலின் அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும்; அதனான் அவை செய்யற்க என்பதாம். இனித் 'தானே வரும்' என்பது பாடாமாயின், அச்செயல் தானே தமக்கு இன்னாதனவாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.